Thursday, April 02, 2009

மாடம் கிளாரிக்கு ஒரு பகிரங்க கடிதம்


மாடம் கிளாரி!

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில், அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி மேரி ஜோய் கில்ரோய் கடந்த மார்ச் 9ஆம் திகதி, உங்களிடம் கடிதம் மூலம் விளக்கம் கோரியிருந்தார்.

அதற்குப் பதில் அளித்த தாங்கள், "
இலங்கையில் நிரந்தர சமாதான தீர்வு ஏற்பட்டு அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஏற்படுவதையே அமெரிக்கா விரும்புவதாகக்" குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் நல்லெண்ணத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.

அனைத்துச் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு என்று மொட்டையாகச் சொன்னால் எப்படி ? தனியாகப் பிரிந்து செல்வதா? சமஷ்டி தீர்வா? அல்லது வெறும் மாகான சபைகளா? என்பதை வகை பிரித்துக்கூறக்கூடாதா?

ஏனெனில் தீர்வுகள் குறித்து நாம் பலமுறை திம்பு முதற்கொண்டு தாய்லாந்து டோக்கியோ ஈறாகப் பலமுறை பேசிவிட்டோம். பேசியதில் கண்டது எதுவுமேயில்லை. பேச்சு பேச்சைத்தொடர்ந்து யுத்தம். யுத்தத்தில் உயிர்களைத் தொலைக்கும் வேதனை. இதைத்தான் நாங்கள் இதுவரை கண்டு வந்துள்ளோம்.
இழப்புகள் எப்போதும் எங்களுக்குத்தான் .அந்த வேதனையில் தான் உங்களிடம் கேட்கின்றோம். உறுதியாக ஒன்றைக்கூறுங்கள். எங்களால் உடன்படமுடியுமா? இல்லையா?என்பதை நாங்கள் கூறுகின்றோம். திக்கில்லாத பேச்சு என்னும் காட்டில் அலைந்து விட்டு தீர்வில்லாது தொடங்கும் இன்னுமொரு யுத்தத்தில் உயிர்களைத் தொலைக்க எம்மிடம் அவ்வளவு உயிர்கள் இல்லை.

எத்தனை முறைதான் ஏமாறுவது?

"இலங்கை அரசாங்கத்திடம் சமாதான தீர்வை வலியுறுத்தும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளிடம், பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதியளிக்குமாறும், வன்முறைகளை நிறுத்துமாறும் கோரியுள்ளதாக " நீங்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

உங்கள் நகைச்சுவையுணர்வைப் புரிந்து கொள்ளும் திறன் எனக்கில்லை என்றே எண்ணுகின்றேன். இன்று போர் நடைபெற்றுக்கொண்டிருப்பது வன்னியில். போரை நடத்திக்கொண்டிருப்பது சிறிலங்கா இராணுவம். நீங்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும்? உடனடியாக போரை நிறுத்தி சமாதானத்தீர்வை வையுங்கள் என்று சிறிலங்கா அரசை வலியுறுத்தியிருந்தால் தமிழ் மக்கள் அனைவரும் உங்கள் நல்லெண்ணத்தைபுரிந்திருப்பார்கள்.

இதை விட்டு விட்டு தன்னைக்காத்துக்கொள்ளப்போராடும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அது என்ன? தக்குதலை முன்னெடுப்பவனை விட்டு விட்டு தாக்குதலால் பாதிக்கப்படுபவனை மட்டும் நிறுத்தச் சொல்லி கோசம் போடுகின்றீர்கள். தற்காத்துக் கொள்வது -நம் பெண்கள் பிள்ளைகளைக் காத்துக் கொள்வது-உங்கள் எண்ணப்படி வன்முறை செய்வதா?

நாங்கள் அத்தனை தூரம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டுமென நீங்கள் ஆசைப்பட்டது எப்படி? இரட்டைக்கோபுரத் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று ஆப்கானிஸ்தான் சென்று தாக்குதல் செய்து கொண்டிருப்பதுவும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் என்று ஈராக்கில் படை நடாத்தும் உதாரணமும் நீங்கள் உலகுக்கு வழங்கியதுதானே. ஆனால் நாங்கள் இன்னும் எங்கள் இடத்தை விட்டு சிங்கள ஊர்களுக்குச் சென்று சண்டையிடவில்லையே? அத்தனைதூரம் சகிப்புடன் இருக்கும் எங்கள் பொறுமையை நீங்கள் மெச்சக்கூடாதா?

"இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு, பொது மக்கள் தங்கியிருக்கும் பிரதேசங்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியதாகவும்
" கூறியிருக்கின்றீர்கள். உங்கள் இத்தனை வேலைபளுக்கள் மத்தியிலும் இலங்கையின் பாலும் தமிழ் மக்களின் மீதும் நீங்கள் கொண்ட கரிசனையை நாங்கள் மெச்சுகின்றோம்.

தீர்வு தான் கொடுக்கப்போகிறீர்களே? தாக்குதலை நிறுத்தச் சொல்லிச் சொல்லக்கூடாதா? அது என்ன பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தக்கூடாது என்பது? அவர்கள் எப்போதுதான் அப்படித் தாக்குதல் நடாத்தியிருக்கின்றார்கள்? நீங்கள் இப்படிக்கூறுவது சிங்கள அரசை நீங்கள் குற்றம் சொல்வதாக ஆகாதா? அப்படி நடாந்திருந்தால் சர்வதேச மனித நீதியின் மாண்புகள் நீங்கள் சும்மாயிருந்திருப்பீர்களா? சில நூறு மனிதர்கள் இரட்டைக்கோபுரத்துடன் இறந்ததற்காக படை நடாத்துபவர்கள் நீங்கள். பல ஆயிரம் மக்கள் இறந்தால் சும்மா இருப்பீர்களா?

"அமெரிக்க ராஜாங்க திணைக்களமும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகமும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து வன்னியில் போரினால் சிக்குண்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றன. "

அடடா.. இராணுவ உடையுடன் வன்னிக்காடுகளில் அலையும் வெள்ளை தோல் மனிதர்கள் இவர்கள் தானா? சிங்கள இராணுவத்திற்கு உதவி செய்பவர்கள் என்று நாங்கள் தவறாக எடை போட்டு விட்டோமே? இவர்கள் ஒன்றும் அரிசி மூட்டையையும் மாமூட்டையையும் காவி வந்ததை நாங்கள் பார்க்கவில்லையே. குண்டுகளைப் போட்டுத் துரத்துவதைத்தானே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

எத்தனை பிஞ்சுக்குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் ஆண்களும் யுத்தக் காயத்தினாலும் உயிரைக் கொல்லும் பசியினாலும் இறந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இழுத்துப்போட்டு மண்மூடவே பலமுமின்றி இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டு துயராற்ற நேரமுமின்றி ஓடிக்கொண்டிருக்கின்றோமே. எப்படி உங்களால் இப்படியெல்லாம் ..? துக்கமாக இருக்கின்றது.

"அத்துடன் இடம்பெயர்ந்தமக்களின் முகாம்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமையம் என்பவற்றின் முழுமை நிவாரணங்களையும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்
" இப்படியும் கூறியிருக்கின்றீர்கள்.

இந்த நேரத்தில் இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் அண்மையில் வெளியிட்ட கருத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இவ்விடம் பெயர்ந்த மக்களின் அவலம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"இடம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு 'நலம் காக்கும் சிற்றூர்கள்' அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், போர் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும் என்று த டெய்லி டெலிகிராப் (2009 பெப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.

இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? சிறிலங்கா அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர த டெய்லி டெலிகிராப் நாளேட்டில் பின்வருமாறு
கூறியிருக்கிறார்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது.

ஆனால், 1930-களில் ஹிட்லரின் நாசிப் படையினர் பயன்படுத்தியது போல, இது வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள் ".

இது நாங்கள் கூறவில்லை கிளாரி அம்மையாரே! அன்னிய நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் கூறியது. சிங்கள அரசின் இடைத்தங்கல் முகாம்கள் பற்றி யும் நடவடிக்கைகள் பற்றியும் அவர் வெளிச்சம் போட்டுக்காட்டியது.

இப்படிப்பட்ட ஒரு கொலைக்களத்திற்கா எங்களைப்போகச் சொல்லி வற்புறுத்துகின்றீர்கள். ஈழத்தமிழ் மக்கள் உங்களிடம்கேட்பது பிச்சையல்ல , உயிர் வாழ்தலுக்கான உத்தரவாதம்.

அதே நேரம் உங்கள் பேச்சை சிறிலங்கா அரசு ஒன்றும் கேட்பது போலத் தோன்றவில்லையே. அது இப்படியொரு அறிக்கை விட்டிருக்கின்றதே.

"விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எந்த விதத்திலும் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை. ஒரு மணி நேரத்துக்கேனும் தற்காலிகமானதொரு போர் நிறுத்தத்தைக்கூட அரசாங்கம் மேற்கொள்ளாது" என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இப்போது நாங்கள் என்ன செய்வது அல்லது நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று இன்னுமொரு அறிக்கை விடுங்கள். நீங்கள் அறிக்கை விடுவதும் அதை நாங்கள் வாசிப்பதுவும் ,இப்படித்தானே காலம் போகின்றது.

இதில் என்ன துயரம் என்றால் உங்களுக்கு அது 4வருட விளையாட்டு. எங்களுக்கு ஆயுள் முழுவதற்குமான சீரழிவு..

வன்னியில் துயரப்படும் ஜீவன்.

மாடம் கிளாரியின் கடிதம்:http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=12512

Wednesday, April 01, 2009

நம்ம மொக்கச்சாமி வந்துருக்காக!


"தமிழக மக்களின் துணையுடன், இந்திய அரசின் ஆதரவைப் பெறுவோம் என்று விடுதலைப் புலிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தூதரக உறவுகளுக்கான பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வராஜா பத்மநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்."

என்று ஒரு செய்தி வந்திருக்கின்றது. (http://thatstamil.oneindia.in/news/2009/04/01/lanka-tigers-hope-to-win-indias-heart-through.html)

இன்று இலங்கையில் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்படுகின்ற யுத்தம் முழுக்கமுழுக்க இந்திய காங்கிரஸ் அரசின் உந்துதலிலேயே நடைபெறுகின்றது என்பது யாவரும் அறிந்ததே. இந்திய இராணுவம் மற்றும் போர்க்கருவிகளை இந்த யுத்தத்தின் நிமித்தம் இந்தியா அனுப்பிக்கொண்டிருப்பது பல சந்தர்ப்பங்களிலும் அம்பலமாகியுள்ளது.

இராணுவ ஆலோசகர்களாக வழி காட்டிகளாக யுத்தத்தை முண்டுகொடுத்துக்கொண்டிருந்த இந்திய இராணுவம் இறுதியில் தானே நேரடியாகக் களம் இறங்கியுள்ளது என்பதற்கும் வன்னிக்காடுகளில் சிதறிக்கிடந்த பல இந்திய இராணுவத்தின் உடல்களே சாட்சியமாகியது. போரிற் காயம் பட்ட இந்திய இராணுவ வீரர்களின் சிகிச்சை தேவைக்காகவே அண்மையில் இந்திய வைத்தியர் குழுக்களும் அங்கு சென்றது என்ற கருத்தும் உள்ளது.

இவ்வாறான செய்திகள் இந்திய இராணுவம் தமிழர்களுக்கு எதிராக சிங்கள பாசிசப்படைகளுடன் சேர்ந்தே களமிறங்கியிருந்ததுஎன்பதை நிரூபிக்கின்றது. நிலமை இப்படியிருக்கையில் இந்திய அரசின் ஆதரவை எப்படி எதற்காகப் பெற்றுக்கொள்ள புலிகள் முயல்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

தமிழீழ விடுதலையை எதிர்க்கும் முதன்மைச் சக்தி இந்தியா என்ற நிலையிருக்கையில் இந்தியாவிற்கு இரங்கற்பா எழுதும் புலிகளின் அறியாமை தான் என்ன? புலிகளை ஒடுக்குவதே தன் ஆயுட்காலக் கடமையாகக் கொண்டிருக்கும் சோனியாவைத் தலமையாகக் கொண்ட இந்திய காங்கிரஸ் அரசு அள்ளிக்கொடுக்கப்போவது தான் என்ன?

இது ஒருவகை இராஜதந்திரம் என்று புலிகள் சப்பைக்கட்டு செய்யக்கூடும். இராஜதந்திரமாகச் செயற்பட்டிருக்க வேண்டிய காலம் ராஜீவ்வின் கொலைக்களக்காலம். அப்போது விட்ட இராஜதந்திரத்தை இப்போது துரத்திப்பிடிக்க முற்படுவது எந்தப் பயனையும் தரப்போவதுஇல்லை. அதே நேரம் இராஜீவ்வின் கொலை நடந்ததானாலேயோ நடக்காது விட்டதனாலோ இந்தியாவின் அஜண்டா மாறியிருக்கப் போவதில்லை.

இதை இந்தியாவின் ஆக்கிரமிப்பு அபிலாசையுடன் பொருத்திப்பார்க்க வேண்டும். பொருளாதாரச் சுரண்டலை மையமாகக் கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பு இவ்வாறுதான் செயற்படும். அதை எதிர்க்கவும் எமது மண்ணைக்காக்கவுமான போராட்டத்தையே புலிகள் அல்ல எவர் தமிழர் சார்பில் போராட்டத்தை முன்னெடுக்கின்றார்களோ அவர்கள் கைக்கொள்ள வேண்டும்.

எமது போராட்டத்தின் எதிரிகளின் எதிரிகளை நாம் இனங்கண்டு நட்புக்கொள்ள வேண்டும். இந்தியாவின் ஏகடியம் பிடித்த அரசியலாளர்களுக்கு கருத்துச் சொல்லி எமது நேரத்தை பாழ்படுத்துதல் தேவையில்லை.நாட்டு நலன் என்ற போர்வையில் தம் கல்லாப்பெட்டியை நிரப்பும் நீசர்களும் போராட்டத் தீரர்களும் ஒன்றல்ல.

இந்திய இறைமை பற்றி அவர்கள் வாய் கிழியக்கதைப்பது போலவே எமது உரிமையில் தலையிடாது இருக்க நாம் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இந்து சமுத்திரப்பிராந்தியம் ஒரு இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இப்பிராந்தியத்தில் வாழும் அனைத்து நாடு இனம் மொழி சார்ந்த அனைவருக்கும் இங்கு உரிமை உண்டு.

எந்த நீதியின் அடிப்படையிலும் உரக்கப்பேசப்படக்கூடிய உண்மையைப்பற்றியே இந்தியாவிற்கு போதிக்க வேண்டும். ஈழத்தமிழ் மக்கள் இந்தியாவின் அடிமைகள் அல்ல என்பதை தமிழ் மக்களுக்காகப் போராடும் புலிகள் உரத்த குரலில் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். சர்வதேச அளவில் ஈழத்தமிழ் மக்களின் இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். எம்மைப்போலவே தமது இன மண் விடுதலைக்காகப் போராடும் மக்களுடன் சக்திகளுடன் கரம் கோர்க்க வேண்டும்.

புலிகளின் கொள்கை பரப்புச் செயலாளருக்கு இத்தனை வேலைகள் இருக்க இந்த வேண்டாத வேலையில் காலத்தைப்போக்குவது எமக்கே பின்னடைவாகும். சின்னஞ் சிறு கியூபா அமெரிக்காவிற்கே சிம்ம சொப்பனமாயிருப்பது வரலாறு.

தமிழக மக்களின் ஆதரவு என்றும் எமக்கு உண்டு. அதில் யாரும் குறை சொல்லமுடியாது. இந்தியா என்பதே உருவாக்கப்பட்ட நாடு. அதில் மும்முடி வேந்தர்கள் கட்டி ஆண்ட தமிழகமும் அடிமைப்பட்டிருப்பது காலத்தின் சோகம். அன்று சோழரிடம் அடிமைப்பட்டுக்கிடந்த சிங்கள தேசத்தை இன்று தூக்கிப்பிடித்திருப்பது ஆரிய காங்கிரஸ்ஸும் இத்தாலிய சோனியாவும்.

புலிகளின் பிரதிநிதியின் இந்த ஸ்டேட்மண்ட் "நம்ம மொக்கச்சாமி வந்துருக்காக!" கணக்கில் தான் இந்திய அரசால் பார்க்கப்படும். இந்த இழி நிலை நமக்கு வேண்டுமா என்று அனைவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இந்தியாவை அலட்சியம் செய்


இன்று வன்னி மண்ணில் அபிஷேகிக்கப்படும் அத்தனை ஈழத்தமிழ் இரத்தத்தில் இருந்தும் நாம் ஓர் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ் ஈழம் தான் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழி வகுக்கும். அதை நாம் அடைந்தே தீருவோம் என்பதுவே அது.

அதை அடைவதற்கு இன்று பெரும் தடையாக இருப்பது இந்தியாவின் அகன்ற பாரதக் கனவு. இவ்வரசியல்க் கனவிற்கு பின் துணையாக நின்று ஊக்கப்படுத்துவது இந்தியப் பெரும் முதலாளிகளின் பரந்த ஏகோபித்த சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொள்வது என்பது. இதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய உலக ஒழுங்கு அவ்வாறு தான் உலகை வழி நடாத்துகின்றது.

இத்தகைய பேராசைகளுக்கு முன்னால் மனிதம் இரக்கம் என்பதெல்லாம் அடிபட்டுப்போகும். அது ஒரு செல்லாக்காசு. செத்துக்கொண்டிருப்பவர்கள் பற்றி நின்று நினைக்க இங்கு யாரும் தயாராகவில்லை. எல்லோரும் மனம் மரத்துப் போயிருக்கின்றார்கள்.தங்கள் சுய ஆசைகள் நிறைவேற கொல்ல முடிந்த அளவு மக்களைக்கொல்லுதல் அல்லது அதனிலும் கூடக் கொல்லுதல் என்பது அவர்களைப்பொறுத்தளவில் ஒன்றும் பாவமில்லை.அது தான் உலகில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இன்று உலக நாடுகள் அனைத்தும் இத்தகைய ஒரு சமன் பாட்டின் அடிப்படையிலேயே 8இயங்கிக் கொண்டிருக்கின்றன.

உலக வல்லாதிக்க நாடுகள் தான் இன்று சர்வதேச சமூகமாகத் தங்களைச் சொல்லிக்கொள்கின்றன. உலகில் பல நூற்றுக்கணக்கான நாடுகள் இருக்கும் பொழுது சில பத்துக்கணக்கான நாடுகள் தானா சர்வதேச சமூகம். இவையே இன்று உலகைச் சுரண்டிக்கொளுக்கும் நாடுகள். இவற்றின் நலன்களே இன்று உலகின் நலன்களாகவும் ஜனநாயகமாகவும் போதிக்கப்படுகின்றது.

இவற்றிற்கெதிரான விருப்பங்கள் எண்ணங்கள் பயங்கரவாதமாகப் படங்காட்டப்படுகின்றது. புஷ்ஷின் காலத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு கற்கால நாகரீகத்திற்கு இன்று மனிதனைக் கொண்டு சென்றிருக்கின்றது. அதை உணர்ந்ததனாலேயே இன்று அந்த நாடுகளில் இருக்கக்கூடிய சாதாரண சிந்தனை கொண்ட மக்களாலேயே அருவருப்புடன் பார்க்க நேர்கின்றது. தங்களை இழிபிறவிகளாகவே உணரமுடிக்கின்றது. அமெரிக்கவர்கள் சிறந்தவர்கள் என்ற மமதைக்குக் கிடைக்கப்பெற்ற பெரும் அடியாக உணருகின்றனர். அதற்குப்பிராயச் சித்தமாகவே கருப்பினத்தவர் ஒருவரை தங்கள் தலைவராக்கி திருப்திப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இன்னும் தங்களைப்பற்றிய அருவருப்பான எண்ணத்தில் இருந்து வரமுடியாது தவிக்கின்றனர். இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமெனத் துடிக்கின்றனர். மக்களின் இந்த மனநிலையை ஆட்சியாளர்களும் உணர்ந்திருக்கின்றனர்.

அதனால் இவர்களை மீறி வேறு போர்கள் உற்பத்தி செய்யப்படமாட்டாது. ஆனாலும் உலகத் தனி வல்லரசுக்கனவு அமெரிக்காவிற்கு எப்போதும் போகாது. அதனால் அது அடைந்த நன்மைகள் அளப்பரியது. பனிப்போர்க்காலத்தில் எதிரணியில் இருந்த இந்தியாவை அரவணைக்க முயல்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்த்தின் தனது ஏஜண்டுகளில் ஒருவராக இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க இடத்தை அது கொடுக்க முன் வந்துள்ளது.

ஜப்பான் பாகிஸ்தான் தென்கொரியா போன்ற நாடுகள் அதற்கான நீண்ட நாள் ஏஜண்டுகள். அதே நேரம் சோவியத்துக்கு அடுத்தபடியாக வல்லரசாக வளர்ந்து வரும் சீனாவுக்கு காத்திரமான எதிரியாக இந்தியாவை முன்னிறுத்தவும் செய்யும். அதற்கான முன் நடவடிக்கையே அமெரிக்கா இந்தியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம். தேவைப்படும் அளவில் தன்கண்காணிப்பில் வளர்த்து விடுவதும் கட்டுப்படுத்துவதும் அமெரிக்காவின் நோக்கம். அதாவது இந்தியா எப்போதும் தனிப்பெரும் வல்லரசாக வளர்ந்து விட முடியாது என்பது சொல்லாமல் சொல்லப்படும் பாடம்.

அதே நேரம் இந்தியா தப்பித்தவறி அமெரிக்காவின் கையை மீறிச் செல்ல முற்பட்டாலும் அதை அழிக்கும் கத்தி பாகிஸ்தான்,அதையும் சம நேரத்தில் அமெரிக்கா உருவாக்கியே வைத்திருக்கின்றது. அப்படியொரு நிலமைக்கு இந்தியா வராது என்று அமெரிக்கா நம்புவதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன.

1) இந்திய அரசியல் அமைப்பு. கோணங்கி அரசியல் அமைப்பு உருவாக்கி வைத்திருக்கும் கறைபடிந்த அரசியல்வாதிகள்.

2) சீராய் செப்பனிடாத அடிப்படைக் கட்டமைப்புகள். வீங்கி வெடித்த ஏற்றத்தாழ்வுகள். உ+ம் ஒரு வேளை சோற்றுக்கு ஆலாய்ப்பறக்கும் மக்கள். சந்திரனைச் சுற்றும் சந்திராயன்.

3) இன மதங்களால் முரண்படும் சமுதாயங்கள்.அவற்றுக்கிடையே தீர்க்கப்படாத புரையோடிப்போன பிரச்சினைகள்.

4)கூடிய மக்கள் தொகைப்பெருக்கமும் அதைத்தாங்க முடியாத குறைந்த பொருளாதார வளர்ச்சியும்.

இன்றைய அமெரிக்க கொள்கைப்படி இந்தியாவின் எஜமான விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு தான் இலங்கை வரை அதனால் நக்க முடிகின்றது. இஷ்டப்படி அதனால் இலங்கை நேபாளம் என்று யூரின் போக முடிகின்றது.

இந்தச் சலுகையாலேயே இலங்கையில் இந்தியா முன்னிலை படுத்தப்படுகின்றது. இதை ஈழத்தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையைப் பொறுத்தளவில் வல்லரசுகளைக் கவர்வது இந்து சமுத்திரத்தில் அதன் அமைவிடமும் திருகோண மலை த்துறைமுகத்தின் முக்கியத்துவமும்.
அமெரிக்காவின் இன்னுமொரு செல்லப்பிள்ளையான ஜப்பானுக்கான எண்ணெய்ப்போக்குவரத்து வழித்தடம் இலங்கையைச் சுற்றியே அமைகின்றது.அதையொட்டியே அமெரிக்க ஜப்பானியக் கவனிப்பு இலங்கையின் மீது இருக்கின்றது.

அமெரிக்க ஜப்பானிய நலன்களுக்கு எதிரான சீனாவின் ஆதிக்கம் அங்கு வருவதை அவை என்றுமே அனுமதிக்க மாட்டா. இதை நன்கு அறிந்து கொண்ட சிறிலங்காவின் சீன நட்பு நாடகம் நன்கு வேலை செய்கின்றது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் சிங்களத்தின் இழுப்புக்கெல்லாம் வளைந்து கொட்டின.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குண்டு வைக்காத புலிகளைப் பயங்கரவாதப்பட்டியலில் சேர்த்துக்கொண்டதும் சிங்களச் சிறிலங்காவை குஷிப்படுத்தவே. பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடுபவர்களை குற்றம் சொல்லும் தந்திரம் இது. அவர்களின் போராட்டவலுவைச் சிதறடிக்கச் செய்து தங்களையே தற்காத்துக்கொள்ளும் நிலைக்குக் கொண்டுவருதல். இதுவே கனடா போன்ற இரண்டாம் நிலை நாடுகளும் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக்கொண்ட வரலாறு. அதே நேரம் நேரடித்தாக்கத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்த முடியாத நோர்வே போன்ற ஸ்காண்டி நேவியன் நாடுகளைப் பேச்சாளர்களாக வைத்துக்கொண்டிருக்கின்றது.

அமெரிக்கா அதன் நட்பு நாடுகளிக்கு ஆதரவாக ஈழத்தமிழர்களை "வெல்ல" முடியாத ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் வால் பிடி நாடுகளான சவூதி பாகிஸ்தான் ,தென் கொரியா போன்ற நாடுகளும் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது தான் இன்றைய அரசியல் பொருளாதாரம் ,ஜனநாயகம், மனிதநீதி எல்லாம்.

இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். குட்டி நாய்களுக்கு சோறு போடுவதற்குப் பதில் பெரிய நாய்களுக்கு எலும்பு காட்டுவது பெரிய பலன் தரும். இடைத்தரகர் இல்லாது எலும்பு சாப்பிடுவது எல்லோருக்குமே பிடிக்கும்.

அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் இடைத்தரகர்களை விரட்டியடிப்பதே. அதற்கான ஒற்றுமையும் பலமும் இராஜதந்திரமும் நமக்கு வேண்டும். தமிழ் ஈழத்தின் ஓரங்குல நிலமும் பறிபோகக் கூடாது. அதே வேளை நிலப்பரப்பை இன்னும் பெருக்கிக் கொள்ளலாம். யுத்தத்தை எம்மண்ணில் நடாத்துவது மிகப்பெரிய தவறும் பின்னடைவுமாகும். சிங்கள மண்ணுக்கு விரிவு படுத்த வேண்டும். யாரையும் நிம்மதியாக இருக்கவிட்டால் நாமும் நிம்மதியாக இருக்க முடியாது.

பலஸ்தீனத்தில் ஹமாஸ் செய்வது நல்லதொரு முன்னுதாரணம். ராக்கட்டுகள் விழுந்து வெடிப்பது இஸ்ரேலிய மண்ணில். சேதம் இஸ்ரேலியர்களுக்கு. ஹமாஸையும் உலக நீதி ஒதுக்கித்தான் வைத்திருக்கின்றது. ஆனாலும் அவர்கள் அழிந்து போகவில்லை. அழிக்கமுடியாது. இஸ்ரேல் ஆயுத இராணுவ தொழில் நுட்பத்தில் இந்தியாவை விட மேன்மையானது. அமெரிக்காவிற்கு சவால்விடும் வலிமை கொண்டது.

தோற்கடிக்கப்படும் சிங்களவர்கள் அமெரிக்க நலன்களுக்கு துணை போக முடியாதவர்கள். அமெரிக்காவும் அதிக காலம் அவர்களுடன் இழுபட்டுக்கொண்டிருக்காது. இந்தியாவோ சீனாவோ பாகிஸ்தானோ அமெரிக்காவோ நீண்ட நாள் நிரந்தர நண்பராகவோ பகைவராகவோ இருக்க முடியாதவர்கள். அவர்களின் தேவை அப்படிப்பட்டது. காலப்போக்கில் புதிய வல்லரசுகள் வேறு திசைகளிலிருந்தும் உருவாகலாம்.

ஆகவே இப்போது ஈழத்தமிழர் வாழுவதற்கு இந்தியாவை அலட்சியம் செய்ய வேண்டும். இந்தியாவின் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்பதை உணர்த்தவேண்டும். இந்தியா மீது நாங்கள் காட்டும் அலட்சியம் ஒரு அமெரிக்காவையோ சீனாவையோ அல்லது ஒரு உகண்டாவையோ நம்மிடம் நெருங்கிவர வழி வகுக்கும்.

இது சாத்தியமா ? என்று நீங்கள் யோசிக்கக் கூடும். உங்கள் உயிர் வாழ்தல் உங்களுக்கு முக்கியம் என்றால் நீங்கள் இதைச்செய்தே ஆகவேண்டும். அதே நேரம் வன்னிக்காடுகளில் அலையும் சிங்கள இந்திய இராணுவங்களை அங்கேயே குழி தோண்டிப்புதைக்க வேண்டும். இதில் உங்கள் மனதிலுள்ள புத்தரையும் காந்தியையும் பிடுங்கி எறியுங்கள். அவர்களுக்கு அங்கே மட்டுமல்ல எங்கேயும் இப்போது தேவையில்லை. யாரும் அவர்களைப் பின்பற்றுவதும் இல்லை.

இரத்தத்தைக்கொட்டும் நாம் நிணங்களாய்ப்பிய்த்தெறியப்படும் நாம் அவர்காளைத் தூக்கிச் சுமக்கவேண்டியதில்லை. உங்களுக்குத் தெரியுமா? இஸ்ரவேல் அடாவடியில் பறிக்கப்பட்ட மண்ணில் உருவானது. பலஸ்தீனத்தில் பயங்கரவாதத்தை விதைத்தவர்கள் அவர்கள். உலக நாடுகள் அனைத்தாலும் அங்கீகரிக்கப்படாத நாடு அதுதான். ஆனாலும் உலக நீதி அவர்களைப்பயங்கரவாதிகள் பட்டியலில் போடவில்லை. சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவில்லை. சூட்டுப்போட்ட கனவான்களாக உலகம் முழுவதும் வலம் வருகின்றார்கள். காரணம் அவர்கள் பலம். பல நாடுகளை அடிமைப்படுத்த பொருளாதாரரீதியில் துணை நிற்கின்றார்கள்.

கியூபா என்ற சின்னஞ்சிறு நாட்டையும் அமெரிக்காவின் உலக நீதி தடை செய்தது. மனிதாபிமான அமைப்புக்கள் எல்லாம் பலபக்கங்களுக்கு மனித அவலம் பற்றிப் புலம்பிக்கொண்டன. கியூபா இன்னும் சந்தோஷமாக இருந்து கொண்டிருக்கின்றது. இஸ்ரேல் ஒரு முகம் என்றால் கியூபா மற்றொரு முகம்.

இப்படித்தான் அவரவர் தேவைக்காக முகங்கள் மாறிக்கொண்டிருக்கும். எங்கள் தேவை தமிழ் ஈழத்தில் சுதந்திரமாக வாழுவது. அதைப்புரிந்து கொள்வோம். அது புரியாவிட்டால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான அகதிகளாய் வாழ்ந்த யூதரைப்போல ஒரு அகதி இனம் உருவாகும். அது ஈழத்தமிழ் இனம்.

இந்தியாவை அலட்சியப்படுத்தினால் நாங்கள் ஒன்றும் தனிமைப்பட்டுப்போவோம் என்ற ப்யம் வேண்டாம். கள்ளனுக்குக் கள்ளன். எதிரிக்கு எதிரி. இது தான் இன்றைய உலக ஒழுக்கு. இல்லாவிட்டால் எங்கோ இருக்கும் ஈராக் இஸ்லாமியர்களை அழிக்கும் உலகம் கொசோவா இஸ்லாமியர்களுக்காகக் குரல் கொடுக்குமா? ஒன்றின் நலிவு மற்றையதன் தேவை. ஒன்றின் ஆதாயம் மற்றையதன் வாழ்வு அல்லது சாவு.

நமக்கு முன்னால் உள்ளதெல்லாம் முடிவெடுக்கவேண்டிய இரும்புத் தருணம். தமிழக ஆதரவு போய்விடும் என்ற கவலையும் வேண்டாம். இப்போது ஆதரவளிப்பவர்கள் தமிழுணர்வால் தமிழராய் ஆதரவளிக்கின்றார்களேயன்றி இந்தியர்களாய் அல்ல. அது போல இப்போது ஆதரவளிக்காதவர்கள் எப்போதும் ஆதரவு அளிக்கப்போவதில்லை.

வாழப்போவதும் நாம் சாகப்போவதும் நாம். இதுவரை இத்தனை உயிர்களைத்தொலைத்துவிட்டு இரந்து நிண்றதன் பலன் சிலபல அறிக்கைகள். ஆயுதத்தைக் கீழே போடு என்ற ஆணவப் புலம்பல். பாதிக்கப்பட்டவர்களையே பாதிப்பின் குற்றவாளியாகச் சுட்டப்படும் அயோக்கியத்தனம். இந்தியாவைப்பகைப்பதா? விளைவு விபரீதம் ஆகும் என்ற மிரட்டலும் கதறலும் தெரிகின்றது. இந்தியாவிடம் இரந்து நின்றபோதும் எங்களுக்குக் கிடைத்தது இதுவேதானே. ஆகவே இழப்பதற்கு எங்களிடம் எங்கள் உயிரைத்தவிர வேறு என்ன கிடக்கின்றது.

துணிந்து நின்றால் உயிர் வாழும் தகுதியாவது கிட்டும். நாயைப்போல சுடப்படாத மேன்மை கிடைக்கும். நாலு பேர் வந்து மண் தூவும் பாக்கியம் கிடைக்கும்.

இந்தியாவை அலட்சியப்படுத்தல் என்பது தொடக்கமே. போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கலாம். கண்ணுக்குத் தெரிந்தவரை முன்னோக்கிப் போனால்தானே போக வேண்டிய மிச்சத்தூரம் தெரியும்.